உண்மைச் சரிபார்ப்பு: தனது இ-ரிக்சாவை உடைக்க வேண்டாம்! என ஒருவர் கெஞ்சும் காணொளி - உண்மை பின்னணி என்ன?
வைரலான காணொளிப்பற்றி இந்திய ஊடகம் எதுவும் செய்தி வெளியிடவில்லை. இந்த நிகழ்வு இந்தியாவில் நடக்கவில்லை.
சமூக ஊடகங்களில் உணர்ச்சி பூர்வமாக பரவிய ஒரு காணொளியில், பேட்டரியில் இயங்கும் ரிக்சா உரிமையாளர் ஒருவர் அரசு அதிகாரிகளிடம் தன்னுடைய வாகனத்தை இடிக்க வேண்டாம் என்று கண்ணீருடன் வேண்டிக் கேட்கிறார். காணொளியில் வரும் அந்த நபர், “இது தான் என் வாழ்வாதாரமாக இருக்கிறது, தயவுசெய்து இதை விட்டுவிடுங்கள் , உடைக்க வேண்டாம்” என அழுது கதறுகிறார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் வாகனத்தை அகற்ற நேர்மறையாக பதிலளிக்காமல், அவரது கோரிக்கையை முழுமையாக புறக்கணித்து ரிக்சாவை உடைத்து அகற்றுகின்றனர்.
இந்த காணொளி பலர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தியினை பகிர்ந்த சிலர், இது உத்தரப்பிரதேசம் அல்லது பீகார் போன்ற மாநிலங்களில் நடந்ததாகக் கூறியதோடு, இந்திய அதிகாரிகள் எவ்வளவு மனிதாபிமானமின்றி செயல்படுகிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தச் சம்பவம் என விமர்சித்தனர். இது இந்திய ஒன்றிய அரசியல் கோணத்திலும் பரபரப்பாக பேசத் தொடங்கியது.
ஒருவர் தனது E-ரிக்சாவை இடிக்க வேண்டாம் என கண்ணீரோடு கேட்கும் காணொளி. இச்சம்பவம் இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகின்றது.
இதுகுறித்து பலரும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றனர். அதன் விவரம் கீழே உள்ள இணைப்புகளில் காணலாம்.
ஒரு பயனாளர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த செய்தியின் இணைப்பு
ஒரு பயனாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த செய்தியின் இணைப்பு
மற்றொரு பயனாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த செய்தியின் இணைப்பு
உண்மைச் சரிபார்ப்பு
தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு இந்த காணொளியையும் அதையொட்டி பரப்பப்படும் செய்தியினையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது. முதலாவதாக இந்த காணொளியில் காட்சியில் இருந்து முக்கியமான படங்களை மட்டும் எடுக்கப்பட்டன, அவை Google Reverse Image Search மூலம் தேடப்பட்டன. அதன் மூலம், இந்தச் செய்தியடங்கிய காட்சி ஏற்கனவே மற்ற சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களோடு பதிவாகியிருப்பதை கண்டறிய முடிந்தது.
ஆனால் இந்த தேடலின்போது, இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட எந்த பதிவும் கிடைக்கவில்லை. என்றாலும் பங்களாதேஷ் தாக்கா மாநிலம் பற்றிய பதிவுகள் மற்றும் தலைப்புகள் குறித்த தகவல்கள் அதிகமாக கூகுள் தேடலில் இடம்பெற்றன.
“Centrist Nation TV” என்ற பங்களாதேஷ் செய்தி ஊடகம் தனது X தளத்தில், மே 14, 2025 அன்று இதே வீடியோவைப் பதிவேற்றியுள்ளது தெரியவந்தது. அந்த செய்தியின் தலைப்பிலும், விளக்கத்திலும் இந்த காணொளியில் இடம்பெற்ற துயரக் காட்சித் தெளிவாக பங்களாதேஷின் தலைநகரான தாக்காவில் நடந்த சம்பவம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் அதிகாரிகள் தயவுத்தாட்சனையின்றி சட்டவிரோதமாக இயங்கும் பேட்டரி இ-ரிக்சாக்களை தடைசெய்து தகர்க்கின்றனர் என்ற விளக்கமும் கூறப்பட்டிருந்தது.
இதுக்குறித்த முழுமையான செய்தியினை Centrist Nation தனது யூ டியுப் சேனலிலும் பதிவிட்டிருக்கிறது. அதில் அந்த வாகனங்கள் நசுக்கப்பட்டு ஜேசிபி வாகனம் கொண்டு அரசு அதிகாரிகள் அகற்றும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அச்சம்பவம் குறித்து பலரின் கருத்துக்களும் பதிவாகியிருக்கின்றன.
பங்களாதேசத்தைச் சார்ந்த ஊடகம் வெளியிட்டச் செய்தியினை இந்த யூ டியுப் இணைப்பில் காணலாம்
மேலும் பங்களாதேஷின் வேறு மொழிப்பத்திரிகைகளிலும் இதே காணொளி நிகழ்வுகள் அதே நாளில் செய்திகளாக வெளிவந்துள்ளன. அங்குள்ள மக்களும் அச்சம்பவம் பற்றி தங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மொழியில் பதிவிட்டு பகிர்ந்துள்ளனர். இதன்மூலம் இந்த காட்சி முழுமுழுக்க இந்தியாவிற்கு தொடர்பில்லாத ஒரு நிகழ்வு என்பதனை உறுதியாக அறிந்துக்கொள்ள முடிகிறது. மேலும் வைரலான காணொளிப் பற்றி இந்திய ஊடகம் எதுவும் செய்தி வெளியிடவில்லை.
முடிவு: தெலுங்கு போஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு இந்த சம்பவம் இந்தியாவில் இருக்கும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது அல்ல. அதே போல் தமிழகத்தின் எந்த பகுதியிலும் மற்ற மாநிலத்தவருக்கு அநீதி இழைக்கப் படவில்லை. வெறுப்புணர்வு, அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படும் இந்த காணொளியின் தன்மையை உணர்ந்துக்கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை பாதிக்கும் இதுபோன்ற செய்திகளின் மூலத்தை அறிந்துக்கொண்ட பிறகு தான் பகிர வேண்டும். இதுமுற்றிலுமாக திரிக்கப்பட்ட செய்தி என்பதனை தெலுங்கு போஸ்ட் தனது ஆய்வின் மூலம் உறுதி செய்கிறது.