பெண்ணை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்ததா? - உண்மை இதுதான்

தமிழகத்தில் ஒரு பெண்ணை கந்துவட்டி கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாக பரவும் தகவல் தவறானது. அது ஆந்திராவில் நடந்த சம்பவம்.

Update: 2025-06-19 08:22 GMT

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்கள் குறைவுதான் என்றும், இதனை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது.

அதே சமயம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது என்றும் திமுகவை நோக்கி குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், குற்றச் செயல்கள் தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். அதற்கு திமுக தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு வருகிறது.

பரவும் தகவல்

தமிழகத்தில் கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை மரத்தில் கட்டி வைத்து கொடுமை செய்த கந்துவட்டி கும்பல் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் ஒரு பெண்ணை கும்பல் ஒன்று மரத்தில் கயிற்றால் கட்டி வைத்து வாக்குவாதம் செய்து அடிக்க பாய்கின்றனர். அருகில் ஒரு குழந்தை கதறி அழும் சத்தம் கேட்கிறது.

வைரல் வீடியோவைப் பகிர்ந்த Vinoth Arumugam என்ற எக்ஸ் பதிவர், “கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்... கந்து வட்டிக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தால் மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த வேண்டும். திமுக கேடு தரும்” என்று பகிர்ந்து இருந்தார்.

இதே வீடியோவை தங்க சுதாகர் நாலுவேதபதி என்ற பேஸ்புக் பயனரும் தனது பக்கத்தில் பகிர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்தார்.

Archive 

மேலும் மனிமாறன் பூவை என்ற எக்ஸ் பயனரும் இதே கருத்துடன் வீடியோவைப் பகிர்ந்து இருந்தார்.


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்த போது அது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் இல்லை என்பது தெரியவந்தது.

முதலில் வைரல் வீடியோவை கூர்ந்து கவனித்த போது அதில் தமிழ் மொழி பேசப்படவில்லை என்பதையும், தெலுங்கு மொழி பேசப்படுவதும் கண்டுபிடித்தோம். பிறகு வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில், குமுதம் செய்திகள், சத்தியம் டிவி உள்ளிட்டவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தது.

அதில், “ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள நாராயணபுரம் பகுதியில் கடனை திருப்பி செலுத்தாததால் மகன் கண் முன்னே தாயை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. மனிதாபிமானமற்ற இந்த சம்பவத்திற்கு கண்டனங்கள் வலுத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் உறுதிப்படுத்துதலுக்காக தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தபோது என்டிடிவி, தி இந்து வெளியிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தன.

என்டிடிவி ஜூன் 17ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியைச் சேர்ந்த நாராயணபுரத்தைச் சேர்ந்தவர்கள் திம்மராயப்பா, சிரிஷா தம்பதியினர். இவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முனிகண்ணப்பா என்பவரிடம் சுமார் 80,000 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். பணத்தை திரும்ப செலுத்த முடியாததால் பெங்களூருவுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.



இந்த நிலையில் தனது மகனின் படிப்பு விஷயமாக மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காக ஜூன் 16ஆம் தேதி சிரிஷா நாராயணபுரம் வந்துள்ளார். இதனைக் கேள்விப்பட்டு அங்கு வந்த முனிகண்ணப்பா உள்ளிட்ட கும்பல், அவரிடம் வட்டிப் பணத்தை கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு அவரை அங்கிருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்தனர். மேலும் மகன் முன்னிலையில் தாக்குதலிலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முனி கண்ணப்பா மீது வழக்குப் பதிவு செய்ததோடு 5 பேரை கைது செய்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து வெளியிட்ட செய்தியில், “பெண் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாவட்ட எஸ்.பியிடம் பேசினார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

சிரீஷாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்திற்கு உடனடி நிதி உதவியாக ரூ.5 லட்சத்தை அறிவித்தார், மேலும் அவரது குழந்தைகளின் கல்வியை அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே செய்தியை புதிய தலைமுறை, நக்கீரன் ஆகிய ஊடங்கள் செய்தியாக வெளியிட்டு உள்ளன.


மேலும் ஆந்திர முதல்வரின் அதிகாரப்பூர்வ கணக்கில், சிரிஷாவுடன் சந்திரபாபு நாயுடு பேசிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாதிக்கப்பட்ட சிரிஷாவிடம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசினார். மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக அவர் விளக்கினார். குழந்தைகளுக்கு அரசு ஆதரவளிக்கும் என்று அவர் உறுதியளித்தார். மூன்று குழந்தைகளின் கல்விக்கு அரசு பொறுப்பேற்கும் என்று முதல்வர் உறுதியளித்தார். அவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் மூலமாக சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் அல்ல, ஆந்திராவில் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவு

கடனை திருப்பிச் செலுத்தாத பெண்ணை கந்துவட்டி கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தமிழகத்தில் நடந்ததாக பரவும் தகவல் தவறானது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்த சம்பவத்தை தமிழகத்தில் நடந்தது போல தவறாக பரப்பி வருகிறார்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  தமிழகத்தில் பெண்ணை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கந்துவட்டி கும்பல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News