கோடை வெயில் : மே 12 வரை வெளியே செல்ல வேண்டாம் என பரவும் தகவல் உண்மையா?
ஏப்ரல் 29 முதல் மே 12ஆம் தேதி வரை வெப்பநிலை 45 - 55 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என பரவும் தகவல் தவறானது.

Claim :
ஏப்ரல் 29 முதல் மே 12 வரை வெப்பநிலை அதிகபட்சமாக உயரும். காலை 10 - 3 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம்.Fact :
வைரல் தகவல் போலியானது, இந்த தகவல் பல நாடுகளில் பரவி வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் தொடக்கம் முதல் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. நாள்தோறும் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகிறது. இதனால் நண்பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்லவே தயங்கும் சூழல் இருந்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குவதால், வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் முதல் வாரம் வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால், அதனை பொறுத்து பள்ளிகள் திறப்பு முடிவு செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் தமிழகத்தின் சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழை அளவும் பதிவாகிறது.
பரவும் தகவல்
ஏப்ரல் 29 முதல் மே 12 வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும், ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 என்ற எக்ஸ் பயனர், இந்த மிக நீண்ட பதிவை பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், “மொபைல் பயன்பாட்டைக் குறைக்கவும், மொபைல் வெடிக்கும் வாய்ப்பு உள்ளது. கார்களில் இருந்து எரிவாயு பொருட்கள், லைட்டர்கள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், வாசனை திரவியங்கள், உபகரண பேட்டரிகளை அகற்ற வேண்டும்.
காரின் எரிபொருள் தொட்டியை முழுமையாக நிரப்ப வேண்டாம், காலையில் காரில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக பயணத்தின் போது கார் டயர்களை அதிகமாக காற்றோட்டப்படுத்த வேண்டாம்” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த தகவலை சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
#BreakingNew
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) April 30, 2025
உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
ஏப்ரல் 29 முதல் மே 12 வரை, காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, யாரும் வெளியே செல்லக்கூடாது (திறந்தவெளியில்) ஏனெனில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று வானிலை துறை கூறியுள்ளது, எனவே…
evidencenewstamil என்ற இணையதளத்திலும் இந்த செய்தி பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
உண்மையில் வெப்பம் 45 - 55 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதா என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில் மேற்கண்ட அனைத்து தகவல்களும் தவறானது என கண்டுபிடிக்கப்பட்டது.
நமது தேடலில் இதே தகவல்கள் ஆங்கில மொழியில் சில சமூக வலைதளப் பக்கங்களில் (இணைப்பு 1, இணைப்பு 2) பகிரப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம். மேலும் இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட பல நாடுகளில் இந்த செய்தி பரவியுள்ளதையும் கண்டறிந்தோம்.
வெப்பம் அதிகரிக்கும் என்ற கூற்று உண்மையா?
45 டிகிரிக்கு மேல் என்பது வெப்ப அலையைக் குறிப்பதாகும். ஆகவே, முதலில் வெப்பம் 45 - 55 டிகிரி வரை அதிகரிப்பு என ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்பதைக் கண்டறிய TeluguPost உண்மை கண்டறியும் குழு கூகுளில் சர்ச் செய்தது.
ஈடிவி பாரத் மே 1ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “மே மாதத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் கணித்துள்ளது. வரும் நாட்களில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் இயல்பை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஏதேனும் எச்சரிக்கை விடுத்துள்ளதா என்று அதன் இணையதளத்தில் தேடினோம். அதில் மே மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பு குறிப்புகள் இருப்பதை தெரிந்துகொண்டோம்.
அதில், “இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. வெப்ப அலையின்போது, அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுகின்றன” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெப்பத்திற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான வரைபடத்தையும் இணைத்துள்ளது. அதில் 55 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று எந்த தகவல்களும் இல்லை.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கடந்த ஒரு வாரத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் அவ்வாறான எந்த எச்சரிக்கையும் இடம்பெறவில்லை. நேற்று வெளியிட்ட வாராந்திர செய்திக் குறிப்பில், வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே உயர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 39.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கோடையில் இதுவரை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியா டுடே ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 7.6 டிகிரி அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்று தெரிவித்துள்ளது. இந்தியாவின் கடந்த சில வாரங்களில் பதிவான நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும்.
வழிகாட்டு நெறிமுறைகள் கூற்று உண்மையா?
மத்திய மாநில அரசுகள் வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தேடி எடுத்தோம். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், “வெயில் நேரத்தில் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். வெறும் கால்களுடன் நடக்க வேண்டாம். மது, டீ, காபி, கார்பனேற்றப்பட்ட பானங்கள், அதிக சர்க்கரை தன்மையுடைய பானங்களை தவிர்க்க வேண்டும்.
உச்சி வெயில் நேரத்தில் சமையல் செய்வதை தவிர்க்கவும். சமையலறை பகுதியில் காற்றோட்டத்திற்கு சன்னல், கதவுகளை திறந்து வைக்கவும்” என்றெல்லாம் குறிப்பிட்டு இருந்தது.
#BeatTheHeat | Follow these Do's and Don'ts to enjoy a safe and comfortable summer while staying protected from the heat. pic.twitter.com/xwlI1VB9xQ
— Ministry of Health (@MoHFW_INDIA) April 26, 2025
இதேபோல கோடைக் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என ஒரு சுற்றறிக்கையை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை மார்ச் 25ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
அதில், “தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். பயணத்தின் போது எப்போதும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தர்பூசணி, மஸ்க் மெலன், ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்சத்து மிகுந்த பழங்களை சாப்பிட வேண்டும். மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம். வெயில் நேரடியாக படுவதை தவிர்க்க குடை, தொப்பி, துண்டு ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.
குளிர்ந்த, காற்றோட்டமுள்ள அறைகளில் தங்குங்கள். வெளியில் வேலை இருந்தால் உங்கள் ப்ளானை காலையிலோ அல்லது மாலையிலோ மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். 12 முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது
இந்த இரண்டு அறிக்கைகளிலும் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர கட்டாயம் வெளியே செல்லக்கூடாது என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும், வைரல் பதிவில் உள்ள எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை.
சிவில் பாதுகாப்பு இயக்குனரகம் அதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என கூகுளில் சர்ச் செய்தோம். அப்படியான எந்த செய்திகளும் நமக்கு காணக் கிடைக்கவில்லை. மேலும், இதுபோன்ற அறிவிப்புகளை இந்தியாவின் வானிலை மையம் மற்றும் சுகாதாரத் துறைதான் வெளியிடுகிறது என்பதையும் உறுதி செய்து கொண்டது TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு.
அதே சமயம் டெய்லி மிரர் ஊடகம் வெளியிட்ட இலங்கையுடன் தொடர்புடைய செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், “வெப்பநிலை உயர்வது குறித்து பரவி வரும் உயர் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. அதுபோன்ற எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைரல் தகவல் போலியானது என்று குறிப்பிட்டுள்ளது.
கோடை வெயில்: ஏப்ரல் 29 முதல் மே 12 வரை வெளியே செல்ல வேண்டாம் என்று சூடாகப் பரவும் வதந்தி@CMOTamilnadu @TNDIPRNEWS pic.twitter.com/MZpfEE0G1T
— TN Fact Check (@tn_factcheck) May 2, 2025
இந்த ஆதாரங்கள் மூலமாக வெயில் தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
ஏப்ரல் 29 முதல் மே 12ஆம் தேதி வரை வெப்பம் 45 - 55 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும், பகல் நேரத்தில் வெளியே செல்லக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் பரவும் பதிவில் எந்த உண்மையும் இல்லை. அப்படியான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய, மாநில அரசுகள் வெளியிடவில்லை. ஆகவே, செய்திகளை வெளியிடும் போது பகுப்பாய்வு செய்து வெளியிடுமாறு Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.