Fact Check : அம்பேத்கர் புகைப்படத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் புறக்கணித்தாரா?
அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தாமல் திமுக எம்எல்ஏ புறக்கணித்ததாக வைரலாகும் வீடியோவின் உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்.

Claim :
அம்பேத்கர் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தாமல் திமுக எம்.எல்.ஏ புறக்கணித்ததாக பகிரப்படும் வீடியோFact :
அம்பேத்கர் படத்திற்கு திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர், முதல் சட்ட அமைச்சர், பட்டியலின மக்களின் தலைநிமிர்ந்து வாழ பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்றே போற்றப்படுகிறார்.
அம்பேத்கரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நாடு முழுவதும் மிகச் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி பேதங்கள் இன்றி அனைத்து மக்களும் அம்பேத்கர் சிலைக்கு, உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பரவும் தகவல்
இந்த நிலையில் சென்னை ராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கர் பிறந்தநாள் அன்று, அவரது உருவப் படத்தை மட்டும் புறக்கணித்துவிட்டு பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
@GowriSankarD_ என்ற எக்ஸ் பதிவர், “அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவமதித்த திமுக எம்எல்ஏ” என்ற கேப்ஷனோடு வீடியோவை பகிர்ந்திருந்தார்.
@SathishAji43625 என்ற பதிவர், “திமுக ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தியின் கண்களுக்கு அம்பேத்கர் புகைப்படம் மட்டும் தெரியவில்லை” என்று குறிப்பிட்டு கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
Idhaya Varman என்ற பேஸ்புக் கணக்கில், “அம்பேத்கர் பெயரை சொன்னால் வாயில அம்மை வந்திருமா ? ராயபுரம் எம்எல்ஏவுக்கு” என்று விமர்சனம் செய்திருந்தார்.
உண்மை என்ன?
வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை தொடர்பாக சந்தேகம் எழுந்ததை அடுத்து Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய விசாரணையில், அந்த தகவல் தவறானது என தெரியவந்துள்ளது.
வீடியோவின் ஒரு பகுதி மட்டுமே வெளியானதால், முழு வீடியோவையும் தேடினோம். அதில், சென்னை திமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “வெட்டி ஒட்டி பரப்புவது சிலர் வேலையாக வைத்திருக்கிறார்கள், பொய்களை பரப்பி அதில் குளிர் காய்கிறார்கள். இனி மக்கள் ஏமாற மாட்டார்கள். - Uncut video⬇️” என்று குறிப்பிட்டு முழு வீடியோவும் வெளியிடப்பட்டு இருந்தது.
வீடியோவை நாம் முழுவதுமாக கவனித்தோம். அதில் ஐட்ரீம் மூர்த்தி அண்ணல் அம்பேத்கரின் புகழ் ஓங்குக என்று இரண்டு முறை முழக்கமிட்டுவிட்டு, அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர்த் தூவுகிறார். பிறகு பெரியார், அண்ணா, கலைஞர் படங்களுக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்துகிறார் என்பதை கவனிக்க முடிந்தது. இதன்மூலம் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர்த் தூவாமல் ஐட்ரீம் மூர்த்தி புறக்கணிக்கவில்லை என்பதை Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்தது.
இதுதொடர்பாக ஐட்ரீம் மூர்த்தி ஏதாவது விளக்கம் அளித்துள்ளாரா என அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆய்வு செய்தோம். அதில், கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவை அவர் ஷேர் செய்திருந்தார். அதில் “சென்னை ராயபுரத்தில் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கற்றல் கற்பித்தல் கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி திறந்து வைத்தார். கற்றல் கற்பித்தல் கூடத்தில் நூலகம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வீடியோவிலும் அம்பேத்கர் உருவப் படத்திற்கு ஐட்ரீம் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்தது.
மேலும் ஏப்ரல் 14ஆம் தேதியன்று ராயபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைகளுக்கும் ஐட்ரீம் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பான விளக்கத்திற்காக ஐட்ரீம் மூர்த்தியை Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு செல்போனில் தொடர்பு கொண்டது. “ராயபுரத்தில் ஆதிதிராவிடர் நல விடுதி எனது முயற்சியால் கட்டப்பட்டது. ஒரு விடுதியில் கம்பியூட்டர், புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கி கற்றல் கற்பித்தல் கூடத்தை திறந்து வைத்தோம். அதனை நான் திறந்துவைத்தபோது அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் என நான்கு படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அன்று அம்பேத்கர் பிறந்தநாள் என்பதால் முதலில் அவரது உருவப் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகே மற்ற தலைவர்களுக்கும் மரியாதை செலுத்தினேன். ஆனால், அம்பேத்கருக்கு நான் மலர்த் தூவிய பகுதியை மட்டும் கட் செய்துவிட்டு, அம்பேத்கரை நான் புறக்கணித்துவிட்டேன் என வதந்தியை பரப்பி வருகிறார்கள். எனக்கு எதிராக இதுபோன்ற அவதூறுகளை, திட்டமிட்ட வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
நமக்கு கிடைத்த தரவுகள் வாயிலாக அம்பேத்கர் உருவப் படத்திற்கு, ஐட்ரீம் மூர்த்தி மலர்த்தூவி மரியாதை செலுத்துவதை உறுதி செய்துகொண்டோம். முழு வீடியோவில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தும் பகுதியை மட்டும் கட் செய்து நீக்கிவிட்டு, எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து ஐட்ரீம் மூர்த்தி அம்பேத்கரை அவமதித்துவிட்டதாக தவறான தகவல் பகிரப்பட்டு வருவதை Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு நிரூபித்துள்ளது.
முடிவு
அம்பேத்கர் உருவப் படத்திற்கு ஐட்ரீம் மூர்த்தி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் என்பதை தகுந்த ஆதாரங்கள் வாயிலாக Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு கண்டுபிடித்தது. அம்பேத்கரை அவர் புறக்கணித்ததாக பரப்பப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. ஆகவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.