பள்ளியில் ஆசிரியரை தாக்கிய மாணவன் வீடியோ - சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா?
தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியரை தாக்கிய மாணவன் என தவறான தகவலுடன் வீடியோ பகிரப்படுகிறது. அது ஆந்திராவில் நடந்தது.

Claim :
தமிழ்நாட்டில் ஆசிரியரை தாக்கிய மாணவன் என பரவும் வீடியோFact :
ஆந்திராவில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது போல பரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மற்ற துறைகளை விட கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளுக்கு திமுக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணவர்களுக்காக தமிழ் புதல்வன், புதுமைப் பெண், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, காலை உணவு என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக முதல்வர் தெரிவித்து வருகிறார்.
அதே சமயம் தமிழ்நாட்டில் கல்வித் தரம் மோசமாக உள்ளதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பள்ளி மாணவர்களுக்கே கஞ்சா கிடைக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறது. தற்போது சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால் அதிகமான பொய்ச் செய்திகள் பரவி வருகின்றன.
பரவும் தகவல்
தமிழ்நாட்டில் ஆசிரியர் ஒருவர் மீது மாணவர் தாக்குதல் நடத்துவதாகக் கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவைப் பகிர்ந்து திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை மோசமாக உள்ளதென விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
@vasudevakudumba என்ற எக்ஸ் தள பதிவர் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “கண்டித்த ஆசிரியரை தாக்கிய பள்ளி மாணவன்.. திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வி துறையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது...ஆனால் திமுக அரசு கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு சொல்லி Celebritis வச்சி விளம்பர விழாவே நடத்தி முடித்து விட்டது” என்று விமர்சனம் செய்திருந்தார்.
கண்டித்த ஆசிரியரை தாக்கிய பள்ளி மாணவன்.. திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வி துறையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது...
— Skm (@vasudevakudumba) March 6, 2026
ஆனால் திமுக அரசு கல்வியில் சிறந்த தமிழ்நாடுன்னு சொல்லி Celebritis வச்சி விளம்பர விழாவே நடத்தி முடித்து விட்டது..! pic.twitter.com/Gut6bbB28l
இதேபோன்று சமூக வலைதளத்தில் பதிவு 1, பதிவு 2 வைரலாகின.
சொல்லிகொடுத்த ஆசிரியரை அடிக்கும் மாணவன் வாழ்க்கையில நாசமா போகும்
— REVATHI MIDHULA ADMK வெல்லட்டும் இரட்டை இலை 🏴🏳️ (@Midhula71043R) March 5, 2026
யாரும் குறை சொல்ல முடியாத ஆட்சி 🤦#கேடுகெட்ட_திமுக_ஆட்சி pic.twitter.com/baidey9x8A
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை தொடர்பாக TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை, ஆந்திராவில் நடைபெற்றது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் வைரல் வீடியோவை முழுமையாக பார்த்தோம். அதில் வரும் உரையாடல்கள் தமிழில் இல்லை என்பதையும், தெலுங்கில் பேசுவதையும் கவனித்தோம்.
இதனையடுத்து முக்கிய பிரேம்களை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் வாயிலாக ரிவர்ஸ் இமேஜ் சர்ச்சுக்கு உட்படுத்தினோம். அதில் நியூஸ் தமிழ் மார்ச் 5ம் தேதி வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது.
அந்த வீடியோவில், “ஆந்திராவில் சரியாக பள்ளி வராததை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வீரவள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவன் சரியாக பள்ளிக்கு வராமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்த ஆசிரியரை பள்ளியில் வைத்தே தாக்கிய சம்பவம் சக ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆந்திராவில் நடந்த சம்பவம் என்றே நியூஸ் 18 தமிழ்நாடு, தந்தி டிவி ஆகியவை செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேலும் நமது தேடலில் என்டிடிவி, நியூஸ் 18 இணையதளங்கள் வெளியிட்ட செய்திகளும் நமக்கு கிடைத்தன. என்டிடிவி செய்தியில், “ஆந்திர மாநிலம் வீரவள்ளி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆசிரியரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. மாணவனிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாணவர் ஒரு மைனர் என்பதால், வரவிருக்கும் பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதால், இந்த விவகாரம் கவனமாகக் கையாளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூஸ் 18 செய்தியில், மாணவனின் நடத்தை குறித்து பல்வேறு விதமான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.
இதேபோல தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கத்தில், “பள்ளி ஆசிரியரைத் தாக்கிய மாணவன் தமிழ்நாடு என்று ஆந்திரா காணொளி பரவுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் சம்பவம் ஆந்திராவில் நடைபெற்றது என்பதை Telugupost உண்மை கண்டறியும் குழு உறுதிப்படுத்தியது.
முடிவு
தமிழ்நாட்டில் ஆசிரியரை தாக்கிய மாணவன் என தவறான தகவலுடன் காணொலி பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அது ஆந்திர மாநிலம் வீரவள்ளியில் நடந்த சம்பவம். ஆனால், தமிழ்நாட்டில் நடந்தது என பகிர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

